Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சாவூர்: ஒரத்தநாடு புதூர் கிராமம் வேளாளர் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன், இவரது மனைவி பழனியம்மாள் (வயது55). அய்யப்பன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து ஐயப்பன் வங்கி கணக்கில் ரூ.45 ஆயிரம் பணம் அனுப்பியுள்ளேன் எடுத்து கொள்ளுமாறு பழனியம்மாளிடம் கூறியுள்ளார். இதையடுத்து பழனியம்மாள் நேற்று ஒரத்தநாடு ஸ்டேட் பாங்கில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க சென்றார்.
அப்போது அங்கு நின்றிருந்த ஒரு வாலிபர் பழனியம்மாளிடம், நான் பணம் எடுத்து தருகிறேன் என்று கூறி அவரிடமிருந்த ஏடிஎம். கார்டை வாங்கியுள்ளார். பின்னர் கார்டை மெஷினில் வைத்து எடுப்பது போல் வைத்துள்ளார்.
பின்னர் பழனியம்மாளிடம் கார்டை கொடுத்து விட்டு சென்று விட்டாராம்.
அந்த ஏடிஎம் கார்டை பழனியம்மாள் பார்த்த போது அது தன்னுடையது இல்லை என்பதை தெரிந்து அதிர்ச்சிடைந்தார். உடனடியாக வெளியில் வந்து அந்த வாலிபரை தேடியபோது அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
உடனடியாக அவர் வங்கிக்கு சென்று இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளார். அப்போது அவரது கணக்கை சரிபார்த்தபோது பழனியம்மாளின் ஏடிஎம் கார்டில் இருந்து மர்மநபர் வேறு ஒரு ஏடிஎம் மையத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் எடுத்திருப்பது தெரியவந்தது.
பின்னர் ஒரத்தநாடு போலீசில் இதுபற்றி பழனியம்மாள் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பெண்ணிடம் ஏடிஎம் கார்டை ஏமாற்றி பறித்து சென்று பணத்தை திருடிச் சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.